பூவாளூர் தியாகராயர் (1826-1888)

பூவாளூர் தியாகராயர் (1826-1888)
அறிமுகம்
பூவாளூர் தியாகராயர், திருச்சியை அடுத்துள்ள லால்குடி அருகே இருக்கும் சிறு கிராமமான பூவளூரில் 1826-ம் ஆண்டு பிறந்தவர். தந்தை சிதம்பரம் செட்டியார் . தமிழ்ப் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பேரார்வம் கொண்டு மாணாக்கராக சேர்ந்தார். தனது தந்தையார் தடுத்தும் கேளாமல் தமிழ் கற்று புலவராகி, முதலில் பள்ளி ஆசிரியராகவும், பின்னர் கல்லூரி பேராசிரியராகவும் சாதித்துக் காட்டியவர்.
திருக்குறளுக்கு தவறாக உரை எழுதிய ஆங்கிலேய பாதிரியார் ஒருவர், அவரை காண இல்லத்துக்கு வந்தபோது, தமிழரின் பெருமையான திருக்குறளை சிதைத்த நபரை காணமாட்டேன் என கதவை சாத்தி திருப்பி அனுப்பிய துணிவு கொண்டவர்.
தமிழ்ப் பணி
- திருச்சி படைப்பிரிவில் கிடைத்த வேலையை விடுத்து திருவரங்கம் பள்ளியில் ஆசிரியப் பணியை உவப்புடன் ஏற்று பணியாற்றினார்..
- இவர் எங்கு சென்றாலும் மாணவர் படை ஒரு ஊர்வலம் போல, அவர் பாடலுக்கு பின்பாட்டு பாடியபடியே தமிழ் வளர்த்தபடி நகரை வலம் வந்தார்கள்.
- இவரது புலமை அறிந்து அவரிடம் பாயிரம் எழுதி வாங்க வரும் கவிஞர்களிடம் தன் அறிவிலிருந்து பிசகாமல் சரியில்லாத செய்யுட்களை நேர் முகமாக மறுத்து நல்ல செய்யுட்களை எழுதி வருமாறு ஊக்கம் அளிப்பார். தமிழ் மொழியில் சிறு தவறு நேர்வதையும் பொறுத்துக் கொள்ளாதவர்.
படைப்புகள்
- வீர உமையம்மை பதிகம் , திருச்சிற்றம்பல வெண்பா, சவராயலு நாயகர் ரெட்டை மணி மாலை உள்ளிட்டவற்றை படைத்து தமிழுக்கு சிறப்பாற்றியவர்.
- குருவிடம் கற்ற தமிழுக்கு நன்றிக் கடனாக அவர்மேல் ஒரு நாளைக்கு ஒரு பாடல் என மொத்தம் 95 பாடல்களைப் பாடியுள்ளார்.
விருதுகள் /சிறப்புகள்
- இவர் மீது கொண்ட நட்பின் காரணமாக ‘தமிழ் தாத்தா‘ உ. வே. சா . அவர்கள் தான் கட்டிய வீட்டிற்கு ‘தியாகராயர் இல்லம்’ என பெயர் வைத்தார்.